வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020
முகமூடி நாட்கள்
புதன், 5 ஆகஸ்ட், 2020
மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் - 6 - ராஜம்மாள் - வினித் மணிமாறனின் அலட்சியம்
செவ்வாய், 16 ஜூன், 2020
மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 5 - பூர்ணிமா
மரணத்துக்கு அப்பால்
சென்ற அதிகாரத்தில், நான் எழுதிய எனது தற்கொலை பற்றிய வரிகள் எனக்கு சிரிப்பாக தோன்றினாலும், என்னை பெற்றவர்களை எப்படி பாதித்தது என்று அவர்களின் கருத்துகள் கூறின.
பலரும் பலவாறு அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.
காலையில், பல கருத்து குவியலின் நடுவில் விழித்தேன். அவையனைத்தும் பாராட்டு குவியல்கள். இதுவரை எழுதிய அனைத்திற்கும் ஒரு சேர கிடைத்த நன்மதிப்பு என்று கூட சொல்லலாம்.
எனது தற்கொலை ஒரு பக்கம் இருக்க, நாம் அதையும் கடந்து ஐந்தாம் அதிகாரத்தை எட்டி பார்ப்போம்.
என்னிடம் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள், எனது எழுத்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு பிடித்த விதத்தில் இருந்திடாது.
என்னை வெறுக்க தொடங்குங்கள், என்னையும் என் எழுத்துக்களையும் வழக்கிடுங்கள்.
அது என் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
நா. முத்துக்குமார் போன்ற நல்ல கலைஞர்களை கொன்ற "பெருமை" என்ற போதை எனக்கு வேண்டாம்.
ஆனால் ஒன்று, என்னை முழுமையாக படித்து பிறகு வழக்கிடுங்கள்.
இதற்கு முன் எழுதிய நான்கு அதிகாரத்தை படித்தால் மட்டும், இதை தொடருங்கள்.
இந்த அதிகாரம், எனக்கானது - இதை எழுதவில்லை என்றால், இதுவரை எழுதிய அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான்.
அதிகாரம் - 5 - பூர்ணிமா
சிறுவயதுமுதல் நமக்கென ஓர் நண்பன் இருந்திருப்பான், வளர்த்த பின்போ,நமக்கு தெரிந்த அளவு அவன் உலகை தெரிந்திராத காரணத்தாலோ; வாழ்வின் ஓட்டதாலோ, ஸ்டேட்டஸ் என்ற வக்கற்ற வாழைமட்டையாலோ நாம் அந்த நண்பனை விட்டு விலகி வந்திருப்போம்.
எனக்கு அப்படி, எனது குழந்தை பருவத்தின் வார இறுதி நாட்களை நிரப்பிய பங்கு, இராஜராஜனுக்கு உண்டு.
நான் சிக்ஸ் அடிக்க கற்றுக்கொள்ள, நாள் முழுக்க புல் டாஸ் பந்துகளை வீசியவன்.
நான் சச்சின் ரசிகன், அவன் கங்குலி. நான் சென்னை சூப்பர் கிங்ஸ், அவன் கொல்கத்தா.
இப்படி ஒரு சில கருத்து வேறுபாடு இருந்தாலும் அவன் என் நண்பன்.
இந்த நேரம் உங்கள் வாழ்வின் இராஜராஜனை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சந்தோச பட்டது போதும், இப்போ உங்க இராஜராஜனை மறந்துடுங்க !, நாம கதைக்குள்ள போவோம்...
அதே சம காலத்தில், இராஜராஜனற்ற நேரங்கள் கழிந்தது பூர்ணிமாவும் தொலைகாட்சியுமாய்.
பூர்ணிமா....
எனக்கு தெரிந்து பிறந்தவள், எங்களின் எதிர் வீட்டு பெண் குழந்தை.
ஏழெட்டு வயதுடைய வாயாடியாய், எல்லோரிடமும் வம்பிழுக்கும் பேச்சுடன்; எல்லாரிடமும் எளிமையாய் பழகும் குணமென; மரியாதை குடுக்க தெரியாத 90ஸ் கிட்ஸின் comparison பொருளாக திகழ்ந்தவள்.
90ஸ் கிட்ஸ்கள் டீனேஜை அடைந்த பொழுது; அடுத்த யுகமான 2k கிட்ஸ்ஸின் முதல் மாதிரி (sample) படைப்பு அவள்.
எப்பொழுதும் விளையாட்டு, விஷமம், கிறுத்துருவம், சுட்டித்தனம் என்று அந்த குழந்தையிடம் கண்ட சுறுசுறுப்பை வேறு எந்த குழந்தையிடமும் இதுவரை கண்டிலேன்.
பக்கத்துவீட்டில் உள்ள சித்ரா அக்காவை அத்தை என்று அன்போடு அழைக்கும் அவள், சித்ரா அக்காவின்கண் காரியமேற்ற; அப்புறம் உன்னோட மூன்று மகன்களில் யாரையும் கட்டிக்கிடமாட்டேன் என்று குறும்புடன் மிரட்டியது, இன்றும் நினைவில் உண்டு.
சுட்டி டிவி வருவதற்கு முற்காலம், சன் டிவி காட்ஜில்லா, ப்ரிடேட்டோர், சார்லீஸ் ஏஞ்சல்ஸ் என்று அசாத்திய டப்பிங்கில் அசத்தி கொண்டிருக்க, கேபிள் வயரில் ஊக்கு போட்டு அந்த திரைப்படங்களை எங்கள் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி புள்ளிபுள்ளியாக ஓட்டிய பொழுதெல்லாம், அதன் திரை பிரதிபளிப்பில் பூர்ணிமா இல்லாத நாட்களே இல்லை.
வார இறுதி நாட்களில் நான் எங்கள் வீட்டையடையும் பொழுதெல்லாம், வீட்டு வாசலில் பூர்ணிமாவின் கேலிகிண்டல் கேள்விகள் இல்லாத நாளில்லை.
3 மணிநேர மின் வெட்டு, வீடு கொளுத்தும் கூட்டம், வெள்ளை பாஸ்பரஸ் வீச்சு, போர் செட்டில் காப்பர் வயர் திருட்டு என்று எனது குழந்தை பருவ நாட்களில் பரபரப்புடன் மெல்ல பல செய்திகள் இருந்தன, அச்செய்திகளை வீடு வீடாக ஒலிபரப்பி நடமாடும் அக்கால ரேடியோ அவள்.
பூர்ணிமா ஒரு அசாத்திய புத்திசாலி, அவளது ஒளிர்ந்த எதிர்காலம் அவளது செயல்களிலே தெரிந்தது. யாரையும் பகைக்காமல் நடந்து கொள்வாள்.
குழந்தைகள் என்றாலே அப்படித்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவள், அதிலும் ஒரு படி மேன்மை பெற்றிருந்தாள்.
ஒரு வெள்ளை சட்டை நீளப் பாவாடையென வார இறுதி நாட்களில் பள்ளிச் சீருடை கூட மாறாமல். ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஏறி இறங்கி உரிமையுடன் உலா வருவாள்.
இப்படி சிரிப்பின் அடையாளைமாய் இருந்தவள் பூர்ணிமா.
அஜெய்சன்னை பற்றி கூறினேன் அல்லவா, கிட்ட தட்ட அதே கால கட்டம்.
பூர்ணிமா ஊரில் உள்ள சிறுவர்கள் புடைசூழ, ஆற்றங்கரைக்கு குளிக்க சென்றாள்.
குளித்து கரையேறிய சிறுவர்கள் திரும்பி பார்த்த பொழுது பூர்ணிமா அங்கில்லை.
வந்து தகவல் பெரியவர்களிடம் செல்வதற்குள், முடிக்கொண்டான் அவளை ஆட்கொண்டான் போலும்.
அந்த நொடிகளின் விளக்கத்தை ஊரில் உள்ள ஒவ்வொருவரும் கூறிய பொழுதெல்லாம் அந்த பயங்கரத்தை, நான் உணர்ந்தது போதும்.
அதை இங்கு பதிவிட்டு, வருங்காலத்தில் அதே நொடிகளை நினைத்து என் சட்டையை நனைக்க நான் விரும்பவில்லை.
பொதுவாகவே மரணங்கள் என்னை பெரிதாக பாதித்தது உண்டு.
எத்துனை உயிர் பலி தான், இந்த முடிக்கொண்டான் கொண்டிருக்கும்.
தீரா பசியுடைய அந்த ஆற்றையும் ஆற்றங்கரைப் படித்துறையையும் இப்பொழுது பார்த்தாலும், பூர்ணிமாதான் நினைவில் வருவாள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் சொத்து, அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிப்பதை விட வேறு என்ன வேலை இருந்து விட போகிறது ?
இருந்தாலும் விபத்து என்பது எதிர்பார்த்து நடப்பதல்ல.
அது நடக்கும் ! அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது தான் நம்மை ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடம் இருந்து வேற்றுமை படுத்துகிறது.
ஒரு குழந்தையின் இழப்பு ஒரு குடும்பத்தை எப்படி மாற்றும் என்று சிறுவயதிலே விதி காட்டிவிட்டது.
எனது அம்னீசியா காலத்தில் பூர்ணிமாவை நினைவில் கொள்ள இது போதும்.
தூங்கட்டும் அம்மு !
ஆனால் நீங்கள் உங்கள் இராஜராஜனுக்கு இப்பொழுதும் ஒரு hi message அனுப்பலாம்,
அதில் நாம் எள்ளளவும் குறைய போவதில்லை.
எண்ணற்ற இராஜராஜன்களுக்கு ஏதோ என்னால் முடிந்தது.
திங்கள், 15 ஜூன், 2020
மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 4 - வினித் மணிமாறனின் தற்கொலை
மரணத்துக்கு அப்பால்
பூவரசன், அஜய்சன், ராஜ விக்னேஷ் என்று பலரையும் எழுப்பிவிட்டோம்.
அவர்களின் நினைவலைகள் என் சோகத்தை கிளரியதோடு, உங்களின் வாழ்வில் நீங்கள் கடந்து வந்து பல அஜய்சன்களை, சில பூவரசன்களை நியாபக படுத்தி இருக்கலாம்.
அதற்கு நீங்கள் நன்றி சொல்லாவிட்டாலும், மன்னிப்பு கேட்கும் கடமை என்னிடம் உண்டு.
மனிதர்களை வாழும் பொழுது மதிக்காத நாம், இறந்த பின் ஒரு மாணிக்கத்தை இழந்து விட்டோம், ஒரு பேரிழப்பு என்றெல்லாம் அவர்களை புகழ்ந்து எழுத்துகிறோமே தவிர்த்து அவர்களை தூற்றுவதில்லை.
மரணத்துக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்றால், மனிதத்திற்கு எவ்வளவு பலம் இருத்தல் வேண்டும் ?
ஒருவன் சாலை விபத்தில் இறந்தால், அந்த உயிர்பரிக்கும் காரணியை தூற்றி, ஏசி பேச நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தை கூட அவ்வுயிரை காப்பாற்ற எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இவரு அப்டியே புடிங்கிட்டாரு, அப்டின்னு நீங்க நினைக்குறது என் காதுல விழுது, இருந்தாலும் நாம் செய்யும் தவறுகளை யாரேனும் குத்தி காட்டும் இடத்தில் இப்படி யோசிக்க தான் மனிதனின் மூளை கட்டமைக்க பட்டுள்ளது.
அது படைப்பின் பிழை, அதை மீறி நாம் என்ன செய்கிறோம்; என்பது தான் நம்மை உயர்குணம் படைத்தவனாக்குகிறது.
உயர்குணம் படைத்தவனாய் திகழ்ந்து என்ன சாதிக்க போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம், உயர்குணங்கள் என்பது நியூட்டனின் மூன்றாம் விதி போன்றது.
நீங்கள் ஊன்றி புதைக்கும் விதைகள், எதிர்விசைக் கொண்டு மரங்களாகின்றன, உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் நிழல் தர.
அது போல நற்குணங்களின் பலன்கள் அறுவடை செய்ய நாட்கள் ஆகலாம்.
காத்திருப்பவன் தூக்கம் மறக்கிறான், மறுப்பவன் தூக்கில் இறக்கிறான்.
இதை ஒரு புறம் தள்ளி, நம் அதிகாரம் நான்கை அடைவோம்.
அதிகாரம் - 4 தற்கொலை
ஒரு கொலை செய்ய நமக்கு தேவையான மன தைரியத்தை விட, தற்கொலைக்கு அதீத தைரியம் தேவைப்படுகிறது.
எனது தற்கொலை வரலாற்றை சொல்கிறேன் சற்று கேட்டு இளைப்பாருங்கள்.
நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன், அப்பொழுதெல்லாம் நான் பெரிய படிப்பு புலியல்ல, இப்பொழுதை போலவே ஒரு மந்தக் குழந்தை தான்.
இந்தி என்ற ஒரு எமன் இருந்தான். அப்பாடமும் அவ்வளவு எளிதாய் எனக்கு காட்சியளிக்க வில்லை, ஆனாலும் கட்டாய பாடமாதலால் படிக்க தள்ளப்பட்டேன்.
முயன்றும் முடியவில்லை.., பதினான்கு மதிப்பெண்களோடு, என் வாழ்வின் முதல் தோல்வியை ருசி கொண்டேன்.
பள்ளியில் சற்று விட்டுப்பிடித்துருக்கலாம், அவர்களோ என் தாய் தந்தையை அழைத்து வரச் சொன்னார்கள்.
எங்கப்பா அடிச்சாறுன்னா அஞ்சு விரலும் முதுவுல பதிஞ்சு இருக்கும்.
90'ஸ் கிட்ஸின் முதுகு; அக்கால பெற்றோர்களின் பிங்கர் பிரிண்ட் சென்சார். இது என் பிள்ளை என்று அடையாள முத்திரை வைத்து, எதிர் வீட்டு பையனின் படிப்பாற்றலை கம்பாரிசன் என்ற pattern லாக் வைத்தும் எங்களை secure செய்து திருத்தி வளர்க்க நினைத்திருந்தார்கள்.
அந்த மனுஷன்கிட்ட போயி நான் 14 மார்க்கு வாங்கிருக்கிறேன்னு சொல்ல, அவரு என்ன புரட்டி எடுக்க.... எதுக்கு இதெல்லாம் அப்டின்னு சொல்லிட்டு, ஒரு படபடப்போட வீட்டுக்கு வந்தேன்.
எங்கப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுவாங்க இரவு 8 மணிக்கு தான் வருவாங்க.
வார நாட்கள்ல நான் என் மாமா வீட்ல இருந்து, மாமா பொண்ணோட ஸ்கூல் போயிடுவேன், வார இறுதியில் எங்க வீட்டுக்கு போவேன்.
வீட்டு சாவி, உமாராணி அக்கா வீட்ல இருக்கும் இல்லனா, சித்ரா அக்கா வீட்ல இருக்கும்; வாங்கிக்கிட்டு உள்ள போயி அலமு, ஸ்ரீ குட்டி, தாரணின்னு மாடு; கன்னுக்குட்டி கூட விளையாடுவேன்.
அப்படி விளையாடுற மனநிலைல அன்னைக்கி, நான் இல்லை...
எனக்குள்ள இருந்த விஞ்ஞானி எட்டி பார்த்தான் : உயரம் எட்டாதுன்னு சொல்லி, ஒரு சின்ன துணிய எடுத்து கழுத்தை இறுக்கி கட்டிக்கிட்டா நாம செத்து போயிடுவோம்; அது ஒக்காந்துகிட்டே தூக்கு மாட்டிக்கிற மாதிரினு சொல்லி, அதை முயற்சி செஞ்சு பார்த்தேன்.
ஒரு 5 நொடியில கண்ணு இருட்ட ஆரம்பிச்சுது... லேசான தல வலி ஆரம்பிச்சுது, மண்டை மரத்து போயி அன்னைக்கு தான் உணர்ந்தேன்.
என்னால முடியல கண்ணுல தண்ணி வந்துட்டு.. அதோட அப்டியே அந்த துணிய தூக்கி எரிஞ்சுட்டு தூங்கிட்டேன்.
சாவுறது அவ்ளோ கஷ்டமா ?
அப்போ தற்கொலை செஞ்சுக்குறவங்களுக்கு, இந்தி பரிட்சைய விட பெரிய பிரச்சனை இருக்கு அப்டின்னு வளரந்த பின்ன தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
சனி ஞாயிறு கழிஞ்சுது, திங்ககிழமை பள்ளிக்கூடம் போனப்போ, என் பெற்றோரை அழைச்சுட்டு வர சொன்னதை டீச்சரும் மறந்துட்டாங்க.
அன்னைக்கு நெனச்சேன், அடடா இதுக்கு போயி சாவ பாத்தோமேன்னு...
தற்கொலை எண்ணம் யாருக்கு வேணும்னாலும் வரலாம்...
எனக்கு இப்படி நடந்தது என்ன பெத்தவங்களுக்கே தெரியாது, இதை படிச்சு தெரிஞ்சுகட்டும் 😂
நாம எந்த விஷயத்த நினைச்சு தற்கொலை பண்ணிக்கிறோமோ அந்த விஷயம் நிலையானது கிடையாது.
உலகம் ரொம்ப சின்னது, நாம எதை இழந்தாலும் அதுக்கு ஒரு மாற்று பொருள் உண்டு, உயிரை தவிர .
ஆண் அழக்கூடாது என்பார்கள்,
ஆனால் மனிதன் அழவேண்டும், தவரிழைத்து அதை கடந்து வர.
நீங்கள் வாழ்வில் பிரச்சனையாக நினைத்த எத்தனையோ விடயங்கள், காலம் கழிக்க ஒன்னுமில்லாமல் போயிருக்கும், அது போல தான் இதுவும் என்று நம்புங்கள்.
இதுவும் கடந்து போகும் என்பது வாட்சப் ஸ்டேட்டஸ் அல்ல " ஒரு வரி மருந்து "
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தால், தயவு கூர்ந்து உங்கள் நண்பர்களை அழைத்து மனம் விட்டு பேசுங்கள், அப்படியும் முடியவில்லை என்றால் ஒரு சனி ஞாயிறு போகட்டும், திங்கள் கிழமை நீங்களே மறந்து விடிவீர்கள்.
அதையும் மீறி உங்களுக்கு ஒரு தீர்வு வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 104 அல்லது 8220829080.
உங்களுக்காக வினித் மணிமாறன்...
கடைசீயாக நான் சொல்ல வர்ரது என்னானா " பிதுக்குன பேஸ்ட்டை மறுபடி அந்த டியூப் குள்ள நுழைக்க முடியாது " ஒரு தடவ பிதுக்குனா அம்புட்டு தான் பாத்துக்கோங்க !
என்னை இந்தியில் பிராத்மிக் பரீட்சையில் பாஸ் பண்ண வைக்க, தேர்வு அறையில் translation பிரிவில் 40 மார்க்கு வாங்க உதவிய சோபனா அக்காவுக்கு நன்றி !
சோபனா எங்கிருந்தாலும் வாழ்க !
