மரணத்துக்கு அப்பால்
சென்ற அதிகாரத்தில் பூவரசனை பற்றி பாத்திருந்தோம்.
பூவரசனுடன் பணிபுரிந்த பலருக்கும் அப்பதிவை அனுப்பி இருந்தேன்.
ஏமாற்றம் தான் மிச்சம் !!!
ஆனாலும் ஏமாற்றத்திற்கு நடுவில், உண்மையில் பூவரசனின் மீது நம்பிக்கை வைத்த சிலர் (அவர்கள் பூவரசனின் மறைவிற்கு நீலிகண்ணிர் வடிக்காதவர்கள் என்பது குறிப்பிட தக்கது) பூவரசனின் நினைவுகளை பகிர்ந்தார்கள்.
குறிப்பாக நண்பர் ஜீவா கூறியது, அவனிற்கு எல்லாம் கிடைத்தது, அனைத்திலும் வென்றான் ஆனால் வாழ்விடம் தோற்றான் என்பது அது !
நீ உறங்கிடு பூவரசா !
பூவரசனை விடுவோம்,
என் வாழ்வில் முதல் இழப்பை அதிகாரம் இரண்டிற்கு தள்ளுகிறேன்.
இதில் உண்மைத்துவம் அதிகமாகவே இருக்கும் ! என் கண்ணீர் என் பேனா மையை கரைக்கவும் முயலலாம் !
இப்பதிவு உங்கள் மனதை உருக்கினால் மன்னிக்கவும் !
அதிகாரம் 2 - அஜய்சன் - என் நண்பன்
2006, அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, நன்னிலம்.
ஆங்கில வழி கல்விக்கான ஆறாம் வகுப்பு மாணவர் செயற்கை முடிந்து, முதல்நாள் பள்ளியும் திறந்தாயிற்று.
எந்த காரணத்தாலோ தெரியவில்லை என்னை வகுப்பின் மாணவர் தலைவனாக தேர்வு செய்தார் அறிவியல் ஆசிரியை மாரியம்மாள்.
மாணவர் தலைவர் என்றால் பேசும் மாணவர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதி, டிக் அடிப்பது, பிறகு ஓவர் டாக்கிங், வெரி வெரி டாக்கிங் என்று எனக்கான சட்டங்களை நானே எழுதி, பிறகு நன்னடத்தையின் பேரில் பரோல் வழங்கி அவர்களின் பேரில் உள்ள குற்றங்களை குறைப்பதாக கூறி, ஆறாம் வகுப்பிலேயே நான் ஒரு நீதிபதியாக விளங்கினேன் என்றால் பாருங்களேன் !
அவ்வாறு நான் எழுதிய பெயர்களைக்கூட, ஆல்பபெட்டிக் அடிப்படையில் எழுத வைக்கும் வல்லமை வாய்ந்தவன் அஜய்சன்.
எப்படி இருப்பான் அஜய்சன், சற்று விளக்குகிறேன் கற்பனை செயது கொள்ளுங்கள் !
வகுப்பில் அனைவரையும் உயர அடிப்படையில் நிறுத்தி, பின் அதன் அடிப்படையில் அனைவரையும் பெஞ்சுல அமர செய்வார்கள்.
அஜய்சன் தான் இருப்பதிலேயே குட்டை.
பள்ளி வழிப்பாட்டுக்கு அனைவரையும் வரிசையில் அழைத்து செல்வது மாணவ தலைவனான என் வேலை. எனக்கு அடுத்தபடியாக சிரித்து கொண்டே கையை பின்னாடி கட்டி கொண்டு நின்ற அஜய்சன் இன்றும் என் நினைவில் உள்ளான்.
ஒரு கருங்காப்பி பேண்ட், வெள்ளை கருங்காப்பி கட்டம் போட்ட சட்டை, அவனது பேண்ட்டை அவனது ஒல்லிக்குச்சி உடம்பில் பிடித்து வைத்து கொள்ள ஒரு பெல்ட், என்று மாப்ள சும்மா கில்லி மாதிரி இருப்பான்.
சேட்டையின் மறு உருவம் அவன், பேசினால் பேசிக்கொண்டே இருப்பான். பட்டை பெயர்கள் பலவுண்டு.
அப்போதெல்லாம் குரு டுட்டோரியலில் டூயூஷன் படித்தோம் !
நான், ராஜேஷ், அஜய்சன் என்று மூவரும் ஒன்றாகத்தான் சுற்றினோம்.
அஜய்சன் அம்மாவின் வளர்ப்பு, அம்மா அதட்டினால் பேண்ட் நனையாதது மட்டும் தான் குறை.
தினமும் பள்ளி முடிந்த பிறகு ராஜேஷ் எங்கள் வீட்டுக்கு வந்து, நான் உடை மாற்றிய பிறகு, அஜய் வீட்டுக்கு செல்வோம். அஜய் அம்மா ஆளுக்கு ரெண்டு பிஸ்கட் குடுபாங்க. என் தலைவன் திட்டு வாங்கிட்டே களம்புவான்.
90ஸ் கிட்ஸ்களின் முதல் எதிரி கம்பாரிசன்.
அவ்வலையில் சிக்காதவர்கள் இல்லை நாங்கள்.
பிறகு மூவரும் சைக்கிளை எடுத்துக்கிட்டு டியூஷன் போவோம்.
என் மீது என்ன பகையோ தெரியாது, ஒரு முறை என் சட்டை பையில்,
"நான் அவளை விரும்புகிறேன், அவளை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று என் பள்ளியில் படித்த பெண்ணை குறிப்பிட்டு அஜய் மொட்டை கடுதாசி ஒன்றை எழுதி வைக்க, அதை துணி துவைக்கும் பொழுது என் சித்தி எடுத்து படிக்க, என் அம்மாவும் சித்தியும் துணியோடு சேர்த்து என்னையும் துவைத்து எடுத்தார்கள்.
இது அஜய்சன்னின் வால் தனத்திற்கு ஒரு எடுத்து காட்டு.
ட்ரைலர்கள் பல இருந்தாலும் மெயின் பிச்சர் கீழ இருக்குறது தான்.
அவன் ஒரு முறை சலூனில் அவன் விருப்பத்திற்கு முடி வெட்டினான் என்று, வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அவன் தலையை கரையான் கரைப்பது போல கரைத்து பள்ளிக்கூடத்திற்கு அவன் அம்மா அனுப்ப, அன்று பள்ளியில் ஏதோ விழிப்புணர்வு பேரணி நடத்த, நன்னிலத்தின் வீதிகளில் அவனை பரிகசித்து நாங்கள் சிரித்த நாளின் நினைவுகள் பழைய செய்தி தாளின் துணுக்கு செய்தியாக அவ்வப்போது நினைவில் வரும்.
இதையெல்லாம் தாண்டி அஜய்சன் இருந்தால் அங்கு சிரிப்பு கண்டிப்பாக இருக்கும்.
குரு டுட்டோரியளில், பீஸ் வாங்க வரும் தனலட்சுமி மிஸ் முதல் பாடம் நடத்திய துர்கா மிஸ் வரை அவனிடம் வம்பு வளர்க்காத ஆளே இல்லை !
தலைவன் காலையில் 7 மணி டியூஷன்க்கு 7.30 க்கு வந்து பெரிய சார் கிட்ட பெருச்சாலியா துடிக்கிறது இன்னமும் நியாபகம் இருக்கு.
2006 முதல் 2008 வரை என் வாழ்வின் வசந்தகாலம் அப்டின்னு நான் இப்போ சொல்றேன்னா, அதுல அஜய்சன்னோட பங்கு ரொம்ப அதிகம்.
என்னோட ஒன்பதாம் வகுப்பு படிப்பை கும்பகோணத்துல வேற பள்ளிக்கூடத்தில படிச்சேன்.
அங்கே எல்லாம் புதுசா இருந்துச்சு, கிணத்து தவளை கடலை பாத்த மாதிரின்னு சொல்லலாம்.
ஏதோ தத்தி தாவி வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு, ஒரு அரையாண்டு பரீட்சைக்கு முன்னாடி, அந்த அவலமான செய்தி எனக்கு வந்துச்சு.
யாரோடையோ ஆத்துல குளிக்க போன அஜய்சன் சட்டர்ஸ்ல மாட்டி இறந்துட்டானும், அவன் உடம்பை சொந்த ஊரான சென்னைக்கு எடுத்துட்டு போயிட்டங்கன்னும்.
அந்த செய்தி எனக்கு பழைய செய்தியான பிறகு கூட எட்டி இருக்கலாம்.
ஆனா அதை கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.
ஆனாலும் இன்னக்கி வரைக்கும் அஞ்சலினு ஒரு பெயர் கேட்டா எனக்கு அஜய்சன் தான் ஞாபகம் வருவான்.
அது எனக்கும் அஜய்சன்னுக்கும் உள்ள இரகசியம்.
சில விபத்துகள் வாழ்க்கையில பெரிய இழப்புகளை கொண்டுவந்து தினிச்சிடும்.
எனக்கு அப்படி ஒரு இழப்பு தான், நான் இழந்த என்னோட முதல் நண்பன் - அஜய்சன்.
எனக்கு கிடைக்காத பாக்கியம், அஜய்சன்னோட ஒரு போட்டோ...
இப்படி அஜய்சன்னோட நினைவுகளை எழுதி வச்சு எனக்கு வருங்காலத்துல அம்னீசியா வந்தாலும் நினைவுல இருக்க வழி வகுத்துக்கிறேன்.
அமைதி கொள் அஜய்சன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக