ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு - பெயர் காதலர் தினம்

இத்தனை ஆண்டுகளாய் எம் எழுத்துகள் தோற்றும்,

இம்முறை அவள் வருவாளென்று மனம் உந்த;

அதைத் தேற்ற காகிதம் காத்திருக்க,

பேனா மையோ எண்திசையிலும் சிந்திச்சிதர தயாராகிறது....

முன்பேழுதிய கட்டுரைகளை படித்திருந்தால் உங்களுக்கு எந்நிலை புரியலாம்..

எப்போதாவது மட்டுமே எங்கள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்லும் நாட்களில்,

எந்த பேருந்தில் கூகூர் காரியை சைட் அடித்தேனோ அதே பேருந்தில் அதே இருக்கையில் இருந்து எழுதுகிறேன்.

என்னோடு பஸ்ஸில் ஏறும் ராஜேஷ், சஷ்டி, ராஜராஜன், என யாரும் என்னருகில் அமரவில்லை, 

பக்கத்து பஸ் ஸ்டாப்பில் ஏறி எங்களுக்கு இருக்கையை பிடித்து வரும் கல்யாண சுந்தரம் கத்தாரில் காதல் கசக்குகுறார், பால முருகனோ விவேகானந்தர் குறுக்கு தெருவில் அட்ரஸ் தேடுகிறார்... 

ஆனால் சில்லறைக்காக சண்டைபோடும் அதே கண்டக்டர், இம்முறை சற்று புன்முறுவலோடு சிலிர்த்துப்போய் சில்லறைகளை சிதற விடுகிறார்.

சற்று கண்மூடினால் அந்த நாட்களின் சகலமும் உணர முடிகிறது.

இதுவரை கடந்த கால்நூற்றாண்டின் காதலர் தினங்களில் என்னவெல்லாம் நிகழ்ந்தது !

ஒரு முன்னோட்டம்...

இன்றவள் நம்மை பார்ப்பாளா என்று,
பேருந்து நிலையத்தில்; அவள் விடுப்பென்றும், அறியாமல் நிதானமாய் காத்திருந்த சிலர்.

குறிப்பு 1 : தொண்ணூகளில் பிறந்த இளவட்டங்கள் இதை கடந்தது உண்டு, காதலர் தினமன்று பல அழகான பெண்கள் (அவனுக்கு அவள்) விடுப்பெடுத்து கடுப்பேத்துவார்கள்.

காலை முதல் காணாமல் நாட்கடத்தி, இரவு 10 மணிக்கு சிணுங்கும் சின்ன கருப்பு வெள்ளை ஸ்க்ரீனில், "நான் உன்னை காதலிக்கிறேன், இது என் அப்பா நம்பர்; இதுக்கு கால் பண்ணிடாத" என்ற எத்தனை குறுந்தகவல்கள் நான் சுவாசித்த காற்றலையில் கடந்திருக்கும் !

குறிப்பு 2 : இந்நூற்றாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்று பெறுவதற்கு முன்னதாகவே இன்ஸ்டாகிராம் அக்வுண்ட் ஓப்பன் ஆகிறது, தனது வீட்டு பாடம் செய்ய எட்டாம் வயதில் தனக்கென ஒரு ஸ்மார்ட் போன் அலாட் ஆகிறது.

தொண்ணூகளில் பிறந்த பெண்களுக்கு ஆங்காங்கே இருந்த ஒரு ரூபாய் போன்களில் காதல் வளர்ந்தது, அப்பாவின் போனில் இருந்து மேல் கண்ட குறுந்தகவல் பத்தில் ஆறு பெண்கள் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

வருகை பதிவேட்டில் அவள் தொடர்பு எண்ணை எடுத்து, அவளை அழைக்க முயன்று, தைரியம் இன்றி தொடர்பை துண்டித்து, மிஸ்ட் கால் ஆக, மீண்டும் அழைப்பு வரும் பட்சத்தில், சதீஷ் இல்லைங்களா என்று கேட்டு, தவறாக அழைத்து விட்டேன் என்று மண்ணிப்பு கேட்டு, மாமனார் கிட்ட பேசிட்டேன் என்று நண்பர்களிடம் பிதற்றிய பலரும் உண்டு.

குறிப்பு 3 : தொண்ணூகளில் படித்த பலரும் செய்த முதல் திருட்டு, அவன் விரும்பும் பெண்ணின் வகுப்பின் வருகை பதிவேடு.

அப்பதிவேட்டில் அவள் தொடர்பு எண்ணை இன்க் ரப்பர் கொண்டு அழித்து, போட்டியாளர்கள் குறைப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னியுங்கள் மாரியம்மா டீச்சர்

இவன் எண் அவள் கண் இருக்க, அவள் அழைப்பிற்காக காத்திருந்த நாட்கள்

குறிப்பு 4 : பிப்ரவரி மாதம் முதல் நாள் தொடங்கும் அந்த பரபரப்பு, அவளிடம் இவனது தொடர்பு எண் இருக்கும் பட்சத்தில், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்த பொழுதெல்லாம் - 108 அவசர எண்ணில் பேசும் யாரென்றே தெரியாத அக்காவை விட பொறுமையானவனாய் இவன் பதில் அளிப்பான். (வாழ பழம் மாரி பேசுரியே ப்ரோ)

குடிகொண்ட இதயத்தை வண்ணச்சட்டையால் பிரசுரம் செய்த நாட்கள்

குறிப்பு 5 : வண்ணங்களில் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதாக எண்ணி , கலர் சட்டையில் மோர்ஸ் கோடிங் மொழி பேச காத்திருக்க, எதிர்பாரா விதமாய் அவள் கருப்பு சுடிதார் அணிய, அவள் காதலை வெறுக்கும் தொண்ணூறுகளின் குடும்ப குத்துவிலக்கு என் ஆள் என்று பிதற்றிய சிலரும் உண்டு.

சிவப்பு - நான் ஏற்கனவே ஒருத்தியை / ஒருவனை காதலிக்கிறேன் - அவள் / அவன் என்னை காதலிக்கலாம் ( மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி துணை)

நீலம் - காதலிக்கிறீங்களா என்கிட்ட சொல்லிடுங்க - வீடு காலியாதான் இருக்கு ( வாழ்கிறார்கள் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் நடத்துணர்கள் - TNSTC துணை)

பச்சை - உனக்காக நான் காத்திருக்கிறேன் (கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஜாக்கிரதை)

மஞ்சள் - மனமுடைந்த நிலையில் உள்ளேன் (CSK வெறியன் துணை) 

வெள்ளை - நான் ஏற்கனவே ஒருத்தியை / ஒருவனை காதலிக்கிறேன் - அவளும் / அவனும் என்னை காதலிக்கிறான் / காதலிக்கிறான் ( செவிலியர்கள் / மருத்துவர்கள் துணை)

கருப்பு - ஆணியே புடுங்க வேணாம் (No comments simply waste)

இளஞ்சிவப்பு - உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள படுகிறது (நன்றி மீண்டும் வருக)

ஆரஞ்சு - இப்போது தான் காதலை சொல்ல போகிறேன் (தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்)

இன்றைக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்றெண்ணிய சிலர்

குறிப்பு 6 : அப்போது அப்படி சுத்திய பலரும் வாழ்வில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று எண்ணுவது இழுக்கு.

இருசக்கர வாகனத்தில் இருக்கியமர்ந்து பயணப்பட்ட காதலர்களை கண்டு பொறாமையால் பொசுங்கிய சிலர்

குறிப்பு 7: பாத்து பத்திரமா போங்க, உங்களை பார்க்கும் பத்தில் ஒன்பது பேர்; உங்களை சபிக்கிறார்கள். 

பின் குறிப்பு : அடுத்த காதலர் தினத்தில் யாரையும் சபிக்காமல் ரோட்டில் நிம்மதியாக நடக்க வாழ்த்துகள்.

இவ்வாறாக காதலுக்கும் பல கண்ணோட்டம் இருக்க, காதலிப்பவர்களுக்கென சில கண்ணோட்டம் உண்டு.

காதலிக்க படும்பொழுதுதான் ஒருவன் அல்லது ஒருத்தி முழுமையடைகிறாள். 
(ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கும் பட்சத்தில்)

உங்களிடம் அன்பு இருக்கிறது என்று அதை திணிக்க ஒருவரை தேடாதீர்கள். 

உண்மையான அன்பை உணர உங்களுக்கானவன் எங்கோ பிறந்து இவ்வாறு கிறுக்கி கொண்டு இருக்கலாம்.

ஈரமான மண் எப்போதும் நீரை உறிவதில்லை, 
தேக்கி மட்டுமே வைக்கும்...

இந்த இயந்திர வாழ்வில், ஓட்டம் மட்டுமே முக்கியமல்ல, தேக்கமும் முக்கியம் என்று உணர்வீர்களாக....

கடைசீயாக ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், நாம் காதலுக்காக தான் போராட வேண்டும் காதலியுடன் அல்ல.. 

இனிய காதலர் தின வாழ்த்துகள்...

#வினித் மணிமாறன்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 7 - வீரா

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 7

மரணம் - பலவாறாக பலரை அணுகுகிறது.

அமைதியாக சிலர், போராடாமல் சிலர், பல ஆண்டு போராடி சிலர், நொடி பொழுதில் சிலர் என மரணம் ஆட்கொள்ளும் விதங்கள் பலவாறாக இருக்கலாம்.

முடிவில் நாம் ஒரு மனிதரை அல்லது ஒரு உயிரை இழக்கிறோம் என்பதே உண்மை.

ஆறு அதிகாரங்களாக பல இழப்புகளை பார்த்திருக்கிறோம். ஆனால் ஏழு என்ற இந்த எண், எனது தம்பியின் இழப்பை சுமக்கும் என்று சென்ற வாரம் வரை எண்ணியதுகூட இல்லை.

சில நாட்களாக எழுத ஒரு மனநிலை அமையவில்லை, தொடர்ந்து யூட்டியூப் லைவ், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான தேடல் என்று பல விஷயங்கள் மனதில் ஓட்டம் பிடித்து, மனதை எழுத முற்படுத்தாமல் வைத்திருந்தது.

ஆனால் இப்பொழுது மயிலை ரயில் நிலையத்தில் அமர்ந்து எழுதுகிறேன்.. 

ஜானி வாலி அக்லி காடி என கீச்சிடும் குரலுக்கும், டீ காப்பி சமோசா என்ற கட்டை குரலுக்கும் நடுவில்.

வீரா - என் தம்பி

வீரனார் நமது குலதெய்வம் நாய் வளர்க்க கூடாது என்று கிழவி பிதற்ற, குலதெய்வத்தின் பெயரையே சூட்டுவோம், அவர் வீரனாய் இருந்து நம்மை காக்கட்டும் என்று பல வசனங்கள் பேசி, ராசம்மாளை வென்று வீராவோடு வாழ தொடங்கினோம்.

வீரா வீட்டிற்கு எடுத்து வர, ஸ்லீப்பர் பஸ்ஸில் மறைத்து வைத்து சென்னையில் இருந்து வீடு வரும் வழியில் பயண பயத்தில் அவன் பல முறை சிறுநீர் கழிக்க, தம்பியை வளர்க்கும் பொறுப்பான அண்ணன் ஆனேன் - ஒரே இரவில்.

காலையில் வீட்டு வாசல் அடைய, 

"இதை ஏன் வாங்கிட்டு வந்த, நானே வீட்டுல தனியா இருக்கேன், இதை எப்படி பாத்துப்பேன்.. கொண்டு போயி எங்கயாச்சும் விட்டுடு" என்றாள் ராசம்..

அன்று.. "வீரா பெரியாயி வீட்டுக்கு போயிட்டு வந்தியா என்று அவள் வீராவிடம் கேட்ட வீடியோவை 1000 முறை பார்திருப்பேன் - ராசத்தின் மறைவிற்கு பிறகு"

ராசம் இறந்த செய்தி அறிந்து சென்னையில் இருந்து லாக்டவுன்க்கு இடையில் ஈபாஸ் வாங்கி நான் வந்து சேரும் முன், அவளை வைத்திருந்த ஐஸ் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தான் வீரா.

ராசத்தின் இறுதி சடங்கு முடிந்து, உறவினர் அனைவரும் வீடு திரும்ப, தனிமையில் ராசாத்தின் கேள்விக் கனைகளற்ற அமைதியில் அழுத ஐவரில் வீராவும் இருந்தான்.

பாட்டியை சாப்பிட கூப்பிடு என்று மேகலை சொன்னா போதும், நான் சிறுவயதில் சென்று அழைத்த வேகத்தை விட வீராவின் வேகம் ஒப்பிடமுடியாதது.

சனி ஞாயிறு ரெண்டு நாள் தான் லீவுனு வீட்டுக்கு வந்தா, இரவு தூங்கையில வீரா எனக்கும் என் அண்ணனுக்கும் நடுவில் சோம்பல் முறித்து தூங்குவான்.


அண்ணன எழுப்பு என்று மேகலை சொல்லும் ஒரு சொல் தான் வீராவுக்கு கட்டளை;  போர்வையில் முக்காடு போட்டாலும், ஏறி நின்று கடித்து புரட்டி எழுப்புவான்.

நான் ஊருக்கு போகாத நாட்களில், அர்ஜுன், சுரேந்தர், ஐயப்பன் என்று "வீரா சொன்ன பேச்சுலாம் கேக்குது மாமா சொன்னா போதும் அமைதியா போகுது" அப்படின்னு அவனை புகழையில, நாம அங்க இல்லாம போயிட்டோமோன்னு ஒரு பொறாமை இல்லாமல் இருந்ததே இல்லை.

மேகலைக்கும், மணிமாறனுக்கும் இந்த லாக்டவுன்ல வீரா இல்லைனா நாட்கள் கொஞ்சம் கடினமாதான் போயிருக்கும்.

நான் ரெண்டு புள்ள பெத்தன் - ரெண்டும் நாயும் சென்னைய பாக்க போயிடுச்சு, ஆனா என் புள்ள வீராதான் என் கூட இருக்கான்னு மணிமாறன் ரொம்ப கொழுப்பா சொல்லுவாறு, அப்போ வீரா மேல பொறாமை மேலும் ஒரு ஸ்பூன் கூடும்.

அம்மா அப்பாவிடம் ஒரு பாசம், எப்போதாவது நான் வந்தால் என்னிடம் தனி பாசம் என்று, இரண்டு நாட்கள் என் காலையே சுற்றி வருவான்.

ஒரு வருஷம் தான் ஆகுது ஆனா அதுக்குள்ள அவனை பத்தி எழுத நிறைய கதைகள், அவனுக்கு உடம்பு சரி இல்லாமா போனப்போ விக்ணேஷும் அம்மாவும் கண்கலங்க சோகமாய் அமர்வதும், நான் என்னமோ விலங்கியல் மருத்துவன் போல, தைரியமாக சொல்லும் சொல்லை உண்மை என்று நம்பி கண் துடைத்த நாட்களும் உண்டு.

இதையெல்லாம் தாண்டி அவர்கள் அழுவதை நான் பார்க்க விரும்பியதும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.

ஆனால் சென்ற வாரம் காலையில் ஐயப்பன் போன் செய்து, வீரா கேட்டை உடைத்து கொண்டு வெளியே வந்துடுச்சுன்னு சொன்னப்போ; அது சாதாரணமாக தெரிந்தது, அடுத்த 10 நிமிஷத்தில் வீரா வாகனத்தில் அடிபட்டு விட்டது, நிறைய இரத்தம் போயிடுச்சாம் அப்டின்னு விக்னேஷ் போன் பண்ண, நான் நிதானத்தில் இல்லை.

அம்மா அப்பா அங்க இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டேன், எனக்கே இப்படி இருக்க அவர்கள் அவ்விடத்தில் இருந்து வீராவின் போராட்டத்தை பார்த்தால் ; அவர்களின் நிலையை என்னால் யோசிக்க கூட முடியவுல்லை.

வீராவின் மறைவை ஜவ்வாய் இழுக்கும் பட்சத்தில், மயிலை இரயில் நிலையத்தில் நான் அழுவது போல மேகலையும் அழலாம், மாறனும் அழலாம், விக்னேஷும் அழலாம்..

இருந்தாலும் வீரா என் வீட்டின் கொள்ளைப்புறத்தில் துயில்கொள்ளட்டும்...


மரணம் யார் யாராயோ தழுவுகிறது,  வெற்றி என்றால் என்னவென்றே தெரியாத நம்மையும்
தழுவினால் தான் என்ன என்ற அலட்சியம் என்னுள் நிறைய இருந்ததுண்டு.

ஆனால் இப்போது வீரா இல்லாமல் போன பிறகு, இந்த ஒரு வாரத்தில் என்னுள் எவ்வளவு குற்ற உணர்ச்சி உள்ளதோ; அதே குற்ற உணர்ச்சி என் குடும்பத்தினருக்கும் என் மறைவில் வரலாம் என்ற பயத்தால் வாழ்வை எதிர்கொள்கிறேன்.

தனக்கு சொர்கத்தில் தனிமை என்று ராசம்மா வீராவை அழைத்துக்கொண்டாள் போலும்.

ஆனாலும் வீரா - நீ வாழ்ந்திருக்கலாம்.. 

கண்ணீருடன் வினித் மணிமாறன்