சாதி.. மதம்.. இனம்.. பாகுபாடு..
நீங்கள் படித்தவர்கள், சாதியியத்திற்கு அடிபணிய விருப்பமற்றவராக இருக்கும் பட்சத்தில்..
நீங்கள் ஒருவனின் /ஒருத்தியின் காதலை, எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டாங்க என்று காரணம் சொல்லி உடைத்தெறிய முன்வரும் பட்சத்தில்.
சற்று யோசியுங்கள்......
உங்கள் பெற்றோர் ஏற்று கொள்ளாமைக்கு காரணம் என்ன ?
அந்த பெண் அல்லது ஆண், வேற்று சாதி, மதம், கோத்திரம் என்று பல காரணம் இருக்கலாம்.
அவ்வாறு அந்த வேற்றானை தங்களது பிள்ளை திருமணம் செய்யும் பட்சத்தில், சுற்றம் என்ன பேசும் ? சொந்த பந்தம் என்ன பேசும் என்ற எண்ணம் தானெனில்.
மறைமுகமாக நீங்களும் சாதியியத்திற்கு கட்டுப்பட்டு போகிறீர்கள் என்பது தான் உண்மை.
இந்த சங்கிலி, உங்கள் பெற்றோருக்காக நீங்கள்; உங்களுக்காக உங்கள் பிள்ளைகள் என்று தொடரும்.
எனவே இதை படிக்கும் பெற்றோரோ, பிள்ளைகளோ, சற்று யோசியுங்கள்...
சாதி ஒழிப்பு என்பது பரியேறும் பெருமாள் நல்ல படம், அசுரன் அருமையான படம், கர்ணன் வெறித்தனம் என்று சொல்வதில் இல்லை.
அங்கு உங்களின் எண்ண ஓட்டங்கள் விலைபோகின்றது.
மத்த சிந்தனைகளை உங்கள் கையில்விட்டு,
மேல் சொன்னவாறு பல இடங்களில் என் பெற்றோரை காரணமாக காட்டி சாதியியம் பார்த்த நான் என் கதைக்குள் போகிறேன்.
தொடர்ச்சி :
சொடுக்கிய குறுந்தகவல் அவளிடம் சேர எப்படியும் அந்த பேருந்து ஒரு நான்கைந்து திருப்பங்கள் தான் எடுத்திருக்கும்.
வழக்கமாக அந்த கல்லூரி பேருந்துகள், வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக புறப்படும்.
அதனால் பின்னால் வரும் பேருந்தின் ஒளி எப்பொழுதும் முன்னாள் செல்லும் பேருந்தினை ஒளியேற்றம் செய்து கொண்டிருந்தது.
திருப்பங்களில் சற்று ஒளி மங்கி மீண்டும் நேர்கோட்டில் ஒளியேற்றி,
கண் மூடி திறந்தால், கலங்கரை விளக்க ஒளியை ஒத்திருந்தது.
அவ்வாறு ஒரு திருப்பத்தில் மங்கி, அடுத்த நேர் கோட்டில் ஒளியேற்ற அவள் திரும்பி அவனை ஒரு நொடி பார்த்தாள்.
கண்ணில் காதல் வழிந்தோடும் என்ற எதிர்பார்ப்பு, இமைப்பதற்குள் பதற்றமேற்றியது.
பின்னால் வந்த பேருந்தின் வெளிச்சம் அவள் கண்ணீரில் பிரதிபலித்து, மறுநொடியில் அவன் இதயத்தில் எரியூட்டம் செய்தது.
80 கி.மீ. வேகத்தில் செல்லும் பேருந்தின் திறந்த சன்னல் காற்றிலும் அவனுக்கு வியர்த்தது.
அடுத்த நொடி, மணிமேகலை தென்றலின் கன்னத்தை தொட்டு என்னாச்சுடீ என்ற பெண் டோலிகளுக்கே (தோழிகளுக்கே) உரிதான டோனில் (தோணியில்) அவளை அணைத்து தேத்த முயன்றாள்.
அவனுக்கு அப்பொழுதுதான் தோன்றியது, முதலில் மணிமேகலையை தூண்டிலிட்டுருக்க வேண்டும் என்று.
அப்படி ஒரு வேகமான ஒரு பயணத்தை அந்த நான்காண்டுகளில் அவன் அனுபவித்ததே இல்லை.
அன்றிரவு சற்று அவசர பட்டுவிட்டோமோ, அவள் அந்த நோக்கத்தில் பழகவில்லையோ என்றெல்லாம் எண்ண ஓட்டங்கள் அவன் மண்டைக்குள் மீண்டும் மீண்டும் ஓடி, விடியலே வந்துவிட்டது.
இரண்டாண்டுகளாக அவளது Good morning இல்லாமல் இவன் வானம் விடிந்ததே இல்லை.
அவளுக்கு good morning அனுப்பி கூல் செய்யலாம் என்று அலைபேசியை எடுத்தான், சார்ஜ் இல்லை.
சற்று சார்ஜ் போட்டுவிட்டு, பல் துலக்கி குளித்து இளைப்பாறி, அலைபேசிக்கு உயிர் கொடுத்தான்.
பதட்டத்துடன் பகிரியில் நுழைந்தான், அவளது DP நீக்கம் பெற்றிருந்தது, last seen மறைக்க பட்டிருந்தது.
தான் Block செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு, சோக கீதம் பாடாத குறையாக சனி ஞாயிறு என்று இரண்டு விடுப்பு நாட்களை ஓட்டினான். (Caller tune : கனவே கனவே என்று மாற்றம் பெற்றது, கூடுதல் சிறப்பு)
நாட்கள் யுகங்களாக காட்சியளித்தன, எதிலும் கவனம் செலுத்த முடியாமல், முதலில் கிறுக்கப்பட்ட காய்ப் புழுவின் வேதனையை உணர்ந்தான்.
திங்கள் காலை வந்தது, ஒரு தோசையை பிச்சி வாயில் போட்டு கொண்டு கல்லூரி பேருந்தை பிடிக்க பேருந்து நிறுத்தம் சென்றடைந்தான்.
பேருந்திலாவது அவள் முகம் பார்ப்போம், செய்கையிலேனும் மன்னிப்பு கேட்கலாம் என்ற எண்ணத்தோடு காத்திருந்தான்.
ராமர் கோட்டருகில் சீதையை காணோம்.
அவளும் அழகிய பதுமைகளோடு கைகோர்த்து வாகனத்தை வேகப்படுத்த முற்பட்டு முன்னாள் இருக்கையில் அமர்ந்தாள் போலும்.
மூன்றாண்டுகளில் நடக்காத விடயங்கள் எல்லாம் அன்று நடந்தேறியது.
அவன் முதல் முதலில் பார்த்த அதே மஞ்சள் சுடிதார், நீல நிற ஷூ, கேரளத்து கதகளியாடும் கலைஞர்களின் கீழாடையை ஒத்த ஒரு தோடு.
அவளுக்கே உரிதான குதிரைவால் சடை, கூறிய வாள் தோற்கும் அளவிற்கு கூர்மையான புருவ மை,
அகில அண்டத்தையும் உள்ளடக்கும் வல்லமை கொண்ட ஒரு லேடீஸ் ஸ்லிங் பேக், என அவளை பார்த்தும் பார்க்காததுமாய் குறிப்பெடுப்பதற்குள், பேருந்து இரயில் நிலையம் கடந்திருந்தது.
இவள் ஏதோ கை நீட்டி பேச, ஓட்டுனர் அங்கே பேருந்தை நிறுத்தினார்;
அவளும் மேகலையும் அங்கே இறங்கி கொண்டார்கள்.
அவனும் அங்கேயே இறங்கி அப்படியே சென்றிடலாம் என்றிருந்தான்.
ஆனால் அந்த எண்ணம் வருவதற்குள், அந்த சாரதி (சூரரை போற்று சூர்யாவின் சித்தப்பா பையன்), என்னத்த பாத்தானோ தெறியல, ஒரே அழுத்து அடுத்த ஐந்தாம் நொடி பேருந்து அவ்விடத்தில் இல்லை.
அவள் இறங்கியவுடன் அவள் விழி வழியில் ஒரு வழிபோக்கனாய் நாம் இருப்போமா என்று அவளை பார்க்க முயல்கையில், மேகலை மட்டும் இவன் நோட்டம் விடுவதை பார்த்து தென்றலிடம் ஏதோ சொல்லி சிரித்து அவள் தோள்களை பற்றினாள்.
இவனது எண்ணஓட்டங்களுக்கு அந்த தீனி சற்று தேவையற்றது தான், ஆனால் என்ன செய்வது ? விதி வலியது.
பிறகென்ன மாலை பேருந்தில் அவள் வரவில்லை, இரயில் நிலையத்தில் பேருந்து எந்த சம்மந்தமும் இல்லாமல் கடந்தோடியது.
மறுநாள் முதல் அவள் இவன்கண் படவே இல்லை..
எங்கிருந்து வந்ததோ தெறியவில்லை அந்த தைரியம், தனது Splender பைக்கை எடுத்து கொண்டு, பயணமானான் ; யாரையுமே தெரியாத ஊருக்கு, அவளை தேடி..
அந்த ஊரை அடைந்து, அங்கிருந்த டீ கடையில், அய்யா இங்க சீனிவாசன் sir வீடு எங்க இருக்கு ?
ஊர் காரங்களுக்கே உள்ள திமிரோடு, உங்களுக்கு எதுக்கு தம்பி ?
சற்று தயக்கத்தோடு அவன், இல்லங்கய்யா அவங்க எங்களுக்கு வேண்ட பட்டவங்க தான், அவங்கள நேர்ல பாத்து கொஞ்சம் பேசனும்னு வந்தேன் என்று சொல்ல.
பத்து நிமிஷம் பொறுங்க அய்யா இப்படித்தான் போவாரு பாத்து பேசிக்கிடலாம் என்றான் டீ கடை காரன்.
டீ கடை காரனின் நோக்கம் புரிந்தவனாய், டீ கடை வச்சா பெரிய பிரதம மந்திரினு நெனப்பு என்று நினைத்து கொண்டு (இதில் எந்த உள் குத்தும் இல்லை), வண்டியை எடுத்து கொண்டு வீடு திரும்பினான்.
பொறுத்து பொறுத்து பார்த்து, அலைபேசியில் தொடர்ப்பு கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு சற்று தைரியம் ஏற்றி, அடுத்த வெள்ளிக்கிழமையில் தொடர்பும் கொண்டான்.
ஏதோ ஒரு பெண் எடுத்து, சொல்லுங்க யார் வேண்டும் என்று கேட்க ; துண்டித்து அட்ரெநெல்லின் ஏற்றம் பெற்றான்.
ஆனால் அவனது முயற்சி வீண்போகவில்லை.
சனி கிழமை காலை ஒரு text message வந்தது...
"why did you call me ?" என்று.
அவன் : why didn't you text me ?
அவள் : why should I ? (அகம் புடிச்ச கழுதை)
சிறிது நேரம் கழித்து...
அவன் : Antha alavuku pocha..
மாலையில்...
அவள் : entha alavuku, onnum puriyala..
அவன் : Call ?
அவள் : Not now, veetla ellaarum irukaanga..
கரையை கடக்கும் புயலென, பல வகையான ஒரு வரி கேள்வி பதில்கள் text மெசேஜில் இடம் பெயர்ந்தது.
TRAI நெறிமுறைபடி இன்றைய 100 text message களை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்ற தகவல் வரும் வரை தொடர்ந்தது.
வாழ்க TRAI ... (ஒரு நாளைக்கு 100 MESSAGE என்ற கணக்கு இன்னக்கி வரைக்கும் புரியல எனக்கு)
ஆனால் அந்த மூன்றெழுத்து வார்த்தையை அவனும் இழுக்க வில்லை, அவளும் சொடுக்க இடம் கொடுக்க வில்லை.
பிறகென்ன... சற்று அமைதி கொள்ளுங்கள்...
அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக