வியாழன், 29 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 3




காதலின் உத்வேகம் எத்தகையது என்று ஆராய தொடங்குங்கள், நீங்கள் உங்கள் வாழ்வியல் பயணத்தில் எங்கோ எப்படியோ;  உங்கள் குடும்பம், சூழ்நிலை என்று பலவாறாக  முதல் காதலை தொலைத்து இருப்பீர்கள் / இருக்கலாம்.

ஒருதலை காதலோ, இருமுனை ஈர்ப்போ ; நீங்களே நினைத்தாலும் அந்த காதலை மீட்டெடுத்து உங்கள் முன்னாள் காதலனை/காதலியை அதே உள்ளன்போடு பார்க்க முடியாது.

ஆனால் யாரென்றே தெறியாத என் போன்ற ஒருவன் அல்லது எவளோ ஒருத்தி உங்களின் காதலுக்கு கண்மூடித்தனமாய் உதவி செய்திருக்கலாம்.

அவர்களை இப்பொழுதே அழைத்து பேசுங்கள், உங்களுக்கு 45 வயது ஆனாலும் உங்களின் இளமைக்கு இழுத்து செல்லும் வல்லமை வாய்ந்த அந்த நட்பை வீனடிக்காதீர்கள்.

இப்படி அவ்வப்பொழுது கருத்து கரப்பான் பூச்சிகள் எட்டி பார்க்கும், அதை ஹிட் அடித்து ஜட்டியுடன் படுக்க வைக்க முயலாமல், சற்று அன்புடன் அரவனைத்து; விளக்கமாற்றால் (விளக்கம் என்ற மத்தால்) அடியுங்கள், சாகும் வரை புலம்பிவிட்டு போகட்டும்... 

கரப்பான் பூச்சிகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையோடு நம் கதைக்கு போவோம்...

என்னதான் ஒரு மணி நேரம் பேசினாலும், அவ்விடத்தில் இங்கிதமின்றி அலைபேசி எண்ணை கேட்பது அவனுக்கு உசிதமாக படவில்லை.

பிறகென்ன, வழக்கம் போல தான் ; சமூக வலைதளங்களில் தேடி பிடித்து பறந்தது facebook friend request.

அதை அவள் accept செய்வாளா மாட்டாளா என்ற பெரும் புலம்பல்களோடு ஓடியது 4 நாட்கள்.

இன்றைய காலகட்ட கல்லூரி மாணவர்கள் போலல்லாமல் அப்போது படித்தவர்களுக்கே என ஒரு formula இருந்தது.

செமஸ்டர் நெருங்கினால், இன்டர்நெட்டுக்கு bye bye.

அந்த 50mb Pocket இன்டர்நெட் தான் ஒருவனின் Arrear எண்ணிக்கையை கணக்கிடுவது போன்ற ஒரு எண்ணம்.

அந்த ஒரு வாரத்தில்; பரிட்சை அட்டவனை, Practical என்று பல குழப்பங்கள் அவனை நிலைகுலைய செய்தாலும், பரிட்சையற்ற நாட்களில் அவள் வருகைக்காக நூலகம் சென்று வந்தான்.

அங்கு சென்று, இவன் எடுத்துவந்த நாவல்களை சுவாரஸ்யமாக படித்து கொண்டிருப்பான்.

அங்கே வரும் பெண்களெல்லாம், சரியான பொங்கல் சோறு, தயிர்சாதம் என நினைத்திருக்கலாம். 

ஆசிரியர்களோ; இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா என்று கூட நினைத்து இருக்கலாம்.

ஆனால் அவன் நினைப்பனைத்தும், அடுத்த சந்திப்பில் அலைபேசி எண்ணை வாங்க என்ன வழி என தேடியது.

ஒரு வழியாக அவன் எதிர்பார்த்த அந்த தருணம் அந்த அயோத்தியில் நடந்தது.

ஒருநாள் காலை இவன் நூலகத்தில் நேரம் கழித்து, சோம்பல் தீர்க்க கேன்டீன் டீயை குடிக்கலாம் என்று, தற்கொலை முயற்சி செய்ய முன்வந்த தருணத்தில்;

நம் சகுந்தலாவோ LAB COAT போட்டுகிட்டு, வராண்டாவில் CATWALK செய்து கொண்டிருந்தாள்.

இவன் அவள் LAB குள் நுழைவதை பார்த்து, அடடா என்று தலை முடியை வார முற்படுவதற்குள், RECORD நோட்டில் கை மறைத்து ஒரு HI காட்டி, அதே கன்னக்குழி சிரிப்பில் இவனை கண்காட்சி பொருளாக்கி போனாள்.

அன்று என்ன ஆனதோ தெறியவில்லை, கேன்டீன் தேநீர், தேனில் போட்டிருந்த ஒரு சுவை. 

அன்று பல முறை அந்த வராண்டாவில், கஜா வராண்டா கஜா வராண்டா என்று bgm போடாத குறையாக நமது குட்டி போட்ட பூனை நடந்தது.

அன்று மாலையும் பேருந்தில் காலம் கைகூடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்க, அங்கு ஆப்பு வைக்க அற்புதமாய் கூடவே வந்தாள் மணிமேகலை. (ஒரு பெண்ணை correct செய்ய முயல்பவனுக்கே தெறியும், பெண்களின் பெஸ்ட்டீக்கள் எத்தகைய கிருஞ்சு (CRINGE) என்று... மன்னிக்கவும் டோலிகளே)

இந்த பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படி பட்ட நட்பு ஏற்படுகிறதோ தெறியவில்லை.

பேருந்தில் ஏறும் பொழுதே, கம்மல் கரகாட்டம் ஆட, முகம் சிவக்க சிரித்தபடி ஏறி ராமர் கோட்டருகில் அமர்ந்தாள் சீதை, மாலை வெயில் இவள் கம்மலில் ஒளிச்சிதர்வுற்று, இவனுக்கு ராமன் விளைவை விளக்கி கொண்டிருந்தது.

குளிக்காத காற்று இவள் கூந்தலில் நுழைந்து, மல்லிகை மனமேற்றம் செய்து, குளிர்காற்றாய் பூப்பெய்தி கொண்டிருந்தது.

மயிரிழைகள் காற்றின் கண்ணாமூச்சி ஆட்டத்தில், அவள் புரடியில் இருந்த மச்சத்தை மானபங்கம் செய்துகொண்டிருந்தது.

சுடிதார் துப்பட்டாவோ, இவள் அழகிற்கு இங்கு ஏதேனும் ஈடுண்டா என, வழிபோக்கர்களிடம் துப்பு கேட்டு கொண்டிருந்தது.

இவனோ, பேருந்து ஜன்னல் கம்பியில் சாய்ந்தவாறு; அவள் அழகின் வர்ணனையில் கம்பனிடம் போட்டி போட்டு கொண்டிருந்தான்.

இப்படியே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக அவன் வீட்டை அடைந்தான்.

அடைந்து அலைபேசியை எடுத்து இன்டர்நெட்டை சொடுக்க, அவனுக்கு வந்த முதல் தகவல் ஒலி, "Ilanthenral accepted your friend request. Say Hi " 

Mark zuckerburg சொன்னா கேக்காம இருப்போமா. 

Hi என்ற message தட்டப்பட்டது.
(சற்று முன்னமே அவள் பெயரை சொல்லி இருக்கலாம், இது என்னை அறியாது உங்களிடம் அவள் பெயரை சொன்னதாக இருக்கட்டும். தயவு கூர்ந்து யாரும் facebook search செய்ய வேண்டாம்.)

பிறகென்ன, எல்லா கதைகளும் அரங்கேற்றம் பெற்றது.

பல கதைகள், பல புத்தகங்கள் அவர்களின் தட்டச்சில் இடம் பெற்றது. எல்லாம் மீறி அவன் அவளிடம் அவளது அலைபேசியின் எண்ணை கேட்டான். (ஆண்கள் எங்கு நேரடியாக கேட்டு இருக்கிறோம், சங்கதாராவின் pdf என்னிடம் உள்ளது, அனுப்புகிறேன் என்று கேட்டான்)

அதன் பின் மீண்டும் ஒரு அமைதி, ஒரு 14 மணி நேர மௌன அஞ்சலிக்கு பின், அவள் ஒரு எண்ணை share செய்ய.

சங்கதாரா பரிமாற்றம் அடைந்தது. 
(நன்றி காலச்சக்கரம் நரசிம்மா)

பிறகு தினம் ஒரு கதை என்று அவளை அவனும், அவனை அவளும் நன்றாக தெரிந்து கொண்டார்கள்.

கல்லூரி நான்காம் ஆண்டு வரை நல்ல நட்பாக இருந்த இந்த உறவு, பிரிய போகிறோம் என்ற ஏக்கத்தில் காதலானது.

அதுவும் அவ்வளவு சாதாரணமாக இல்லை, கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா முடிந்து அன்று வழக்கத்திற்கு மாறாக இரவு 9 மணி ஆனது பேருந்துகள் புறப்பட.

அன்று அதே ராமர் கோட்டின் அருகில் அவள் அமர்ந்திருக்க இவன் இரண்டு சீட்டுகள் தள்ளி இருக்க, அவன் அலைபேசியில் இருந்து "நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற குறுந்தகவல் இரண்டாம் அலைகற்றையில் இடைமறித்து, மெதுவியக்கத்தில் பயணித்து அவளிடம் சென்றடைந்தது.

பிறகென்ன நேர்ந்தது, காத்திருங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக