ஒரு பெண்ணின் பார்வைக்கு எத்தகைய சக்தி உண்டெனில் :
நீங்கள் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில், நீங்கள் 3 வருடங்களாக கண்டுகொள்ளலாமலே இருந்த பெண் உங்களைத்தான் தினமும் பார்க்கிறாள் என்று உங்கள் நண்பன் உங்களிடம் கதைக்கையில்;
"உலக அழிகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி" என்று நீங்கள் அவளிடம் இல்லாத அழகை இருப்பதாக எண்ணிக்கவிழும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
உங்களின் எழுத்துகளில் இரண்டு மூன்று வைரமுத்துகளும், கால் கிலோ கண்ணதாசனும், மூன்று வாலி; நா.முத்துக்குமாரும் எட்டி பார்க்க தவற மாட்டார்கள். (அங்கிருந்த அரைபுள்ளியை பாராமல், அதை மூன்று நீர் நிரப்பும் வாலி என்று படித்து; ரங்கராஜனை மறந்து விடாதீர்கள்)
சரி நாம் கதைக்குள் போவோம் :
பேருந்தில் ஏறியவுடன் பேச தொடங்கும் அவன் குரல், பேருந்து முழுக்க ஒலிக்கும்.
பேருந்தில் இருக்கும் ஆசிரியர்கள் திரும்பி பார்த்து, டேய் நான் இங்குதான் இருக்கிறேன் என்று கண்ணாலே விளக்கம் குடுக்க முயல்கையில்;
இருந்துட்டு போ ! என்பது போல இருக்கும் அவன் பேச்சு.
இதிலும் சூடான வாத்திக்கள், வா என் அருகில் அமரு என்று அழைத்து பக்கத்தில் அமர வைக்க அந்த வாத்தியிடமும் பேசி அவரையும் அரட்டைக்குள் இழுக்கும் திறம் வாய்ந்த அரட்டையாளன் அவன்.
வழக்கமாக வடிவேலு காமெடி போல பேருந்தின் வேகத்தை கூட்ட அழகிய பெண்கள் ஓட்டுனருக்கு அருகாமையில் அமர்வது வழக்கம். (அந்த இடத்தில் குறிப்பாக 6 பெண்கள் மட்டுமே அமர்வார்கள், மற்றவர்கள் தெரியாமல் கூட அங்கே செல்ல மாட்டார்கள் - Courtesy : Terror லேடீஸ் கிளப்)
இதையெல்லாம் மீறி நம் சகுந்தலாவோ, ராமர் கோட்டிற்கு முதல் சீட்டில் தான் அமர்ந்தாள்.
(ஆமா அது என்ன ராமர் கோடு ? - தனியார் கல்லூரிகளில் ஆண்களுக்கென தனி வழி பெண்களுக்கென தனி வழி ; இதை பிரிக்க ஒரு மஞ்சள் கோடு இருக்கும் - அதுவே ராமர் கோடு எனப்படும்.
பேருந்தில் ராமர் கோடு எப்படி இருக்குமானால், இடது புறம் உள்ள இருக்கைகளில் பெண்களுக்கு பின்னால் ஆண் ஆசிரியர்கள் அமர, வலது புறம் உள்ள இருக்கைகளில் பெண்பால் ஆசிரியர்கள் அமருவார்கள்.
பேருந்துகளில் ராமர் கோடு உயிர் பெறுகிறது.
வாழ்க ராம நாமம், வளர்க இந்துத்து.)
இப்படியாக இவனது குரல் கேட்க, ஒரு நாளில் ஒருமுறையாவது அவளை திரும்பி வைக்க வேண்டும் என்ற கொள்கையோடு அவனும் பேச, அவளும் அந்த target அடைய அவனுக்கு உதவி செய்தாள்.
இவ்வாறாக ஒரு செமஸ்டர் ஓட, Practical exam வந்து சேர்ந்தது.
Practical examகளின் பொழுது, கூட்டம் அவ்வளவாக இருக்காது, ராமர் கோடும் இருக்காது.
பேருந்துகள் 3 மணிக்கு தயாராகி, 5.15க்கு ஏவப்பட ஏதுவாக காத்திருந்தது.
அன்று முதன் முதலாக அவன் பேச ஆலற்று, அந்த பேருந்து அனாதையாகி இருந்தது.
அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளும் அந்த பேருந்தில் ஏறி, சித்திகரிக்கப்பட்ட ராமர் கோட்டின் அருகில் வந்தமர்ந்தாள்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரும்பி, நீங்க தான அது, கத்திக்கிட்டே வருவீங்க என்றாள்.
இவனுக்கோ, என்னது கத்திக்கிட்டு வருவேனா; கிருஞ்சு (Cringe) குவியலாகிட்டோமோ என்ற எண்ணத்துடன்.... ஆமாம் என்றான்.
கன்னத்தில் குழி விழும் சிரிப்புடன் (அதுவரை அப்படியொரு கன்னகுழியை அவன் பார்த்ததில்லை) , முன்னாள் படர்ந்த முடியை ஒதுக்கியவாறு, actually நீங்க நல்லா பேசுறீங்க என்றாள்...
பஸ்ஸுக்குள் butterscotch வாசம் நிரம்பியது, (ஏன் Butter fly தான் இருக்கனுமா) மாலை வெயில் கண் கட்டச்செய்தது... அதை எல்லாம் மீறி அவன் அவளிடம் Thanks என்று கூறி அவனுக்கே உரிதான பாணியில் பேச தொடங்கினான் .
எதுவுமே இல்லனா கூட பேச ஆள் இருந்தா போதும் நல்லா சந்தோசமா இருப்பேன், ஆனால் இன்னக்கி தான் இந்த தனிமை என்றான்.
அதான் நான் இருக்கிறேனே என்றாள் அவள்.
இது போதும் எனக்கு, இதுபோதுமே என்ற பாடல் bgm கேட்காத குறையாக இவன் பேச தொடங்கினான்.
பிறகென்ன ஜாதக பரிமாற்றம் தவிற மற்ற அனைத்தும் நடந்தது.
ராமர் கோட்டின் அழிவு ஆரம்பமானது, இதையெல்லாம் கண்ணாடியில் பார்த்த பேருந்து ஓட்டுநர் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார்.
எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் அன்று வேறு யாருமே பேருந்தில் வராதது, கூடுதல் சிறப்பாக அமைந்தது. (3 மணிக்கு பரிட்சை முடிய, 6 ரூபாய் டிக்கெட்டுக்கு கஞ்சத்தனம் காட்டியது எவ்வளவு நல்லதாக அமைந்தது)
இது போன்ற இடங்களில் "கஞ்சனுக்கு காலனாவும் ஆயுதம்" என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
அன்றைய பேச்சுவார்த்தையில், பொன்னியின் செல்வன் இடம்பெற்றுவிட்டார், கல்கியின் வாசகர்கள் பேசும் பொழுது ; வேறென்ன வேண்டும் ?
அவன் பூங்குழலியின் காதலன் என்றான், அவளோ அருள்மொழி வர்மன் என்றாள்.
அவ்வளவு நேரம் அருள்மொழி மீது அவன் கொண்டிருந்த மதிப்பு ஒரு நொடியில் வெறுப்பாய் மாறியது.
பிறகு சங்கதாராவை உள்ளிழுத்து அவள் அதை படித்திருக்க மாட்டாள் என்ற எண்ணத்தோடு, சங்கதாராவை மையாமாக வைத்து கதைக்க தொடங்கினான்.
(நன்றாக நினைவில் கொள்ளுங்கள், பொன்னியின் செல்வன் காதலர்களுக்கு, சங்கதாரா ஒரு பிரமாஸ்திரம்.
உங்களின் விருப்பமான நபர் பொன்னியின் செல்வன் பிரியனானால், சங்கதாரா கொண்டு தாக்குங்கள், உங்கள் வெற்றி உறுதி.)
அவள் கண்ணில் அந்த ஆர்வம் தெரிந்தது, அவனும் அதை குறைக்காமல் கதைக்க தொடங்கினான்.
இவ்வாறாக முதல் சந்திப்பில் பல சுவைகள் ஒத்து போக, எப்பொழுதும் போகும் 1 மணி நேர பேருந்து பயணம் அன்று 2 நிமிடங்களாக சுருங்கி முடிந்தது.
அதன் பின் நடந்தது என்ன,
சற்று காத்திருங்கள்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக