புதன், 5 ஆகஸ்ட், 2020

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் - 6 - ராஜம்மாள் - வினித் மணிமாறனின் அலட்சியம்


மரணத்துக்கு அப்பால்

இதுவரை பல்வாறாக மரணத்திற்கு அப்பால் வாழ்ந்தவர்களின் நினைவுகளை சுரண்டி பார்த்து, என் ஞாபக சுவற்றில் படிந்த பாசிப் பட்டைகளை போல, உங்கள் சுவற்றின் சுவடுகளையும் சுரண்டி இருப்பேன் என்று நம்புகிறேன்.

மரணத்துக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் என்று எழுத தொடங்கிய பொழுது இருந்த அதே மனநிலையில் இப்பொழுது இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும்.

ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுக்கு நாம் கொடுக்கும் மரியாதையை, புகழ்ச்சியை, பாராட்டுகளை, அவன் இருக்கும் பொழுது நாம் கொடுக்க தவறுகிறோம் என்பதை எடுத்துரைக்க தவறவில்லை என்று நம்புகிறேன்.

அதிகாரம் - 6 வினித் மணிமாறனின் அலட்சியம்

இதையெல்லாம் எடுத்துரைக்க நினைத்த இதே காலகட்டத்தில், எனது அலட்சிய வாழ்வினை எழுதாமல் போவது பெருங்குற்றம்.

தொண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள், எனது குழந்தை பருவ வாழ்நாளில், என் தாய் மடி தவிர பெரும்பங்கை அவள் மடி கிடத்தியது திண்ணம்.

தந்தை தாயென இருவரும் உழைக்கும் வீடுகளில், கிழவிகளுக்கு எத்துனை பங்குண்டு ?

3 பெண்பிள்ளை 2 ஆண்பிள்ளை என்று பெற்றெடுத்து... தன் கடைசி ஆண் பிள்ளைக்கு எழுந்து நடக்க தெரியாத வயதில் கணவனை புற்றுநோய் ப(ற்)றிக்கொள்ள..

அவரை இழந்து மூன்று பெண் பிள்ளையையும் கட்டி கொடுத்து, இரு ஆண் பிள்ளைகளை தட்டி கொடுத்து..

ஒருவனை பச்சை மையில் கையப்பம் இட வைக்க, இக்கிழவி பட்ட பாடுதான் என்ன ? 

அப்பளம், பால், முருங்கை என்று எத்துனை விற்றுருப்பாள் ?

எனக்கு தெரிந்து இத்தனை இருக்க,
தெரியாத பெருங்கதைகள் பல உண்டு...

மடியில படுக்க போட்டு, ராமாயண, மஹாபாரதம் சொன்ன காலங்கள் எப்போதான் திரும்ப வருமோ !

அவ கதை சொல்ல நான் சிந்தனை செஞ்ச மகாபாரதம், இன்னக்கி நீங்க பாக்குற கிராபிக்ஸ் கிட்டலாம் பிச்சை எடுக்கும்.

எனக்கு இன்னக்கி மகாபாரதம் நினைவுல இல்ல,ஆனா என் கிழவி, அவ மடி, மங்குன வெளிச்சம், வீட்டு வாசல்ல அடிக்கி வச்ச நெல் மூட்டை, அந்து கடிக்கிற அந்தி மாலைனு அவ மட்டும் தான் நினைவுல இருக்கா.

பள்ளிக்கூடம் முடிச்சு வீட்டுக்கு வந்தா சோத்தை பெசஞ்சு.. 
பாட்டி ஸ்பூன் போட்டு தரவா ராசான்னு...

தருவா பாருங்க... 
அன்னைக்கு அந்த சுவை தெரியல... 

இன்னைக்கு வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து swiggyல order பண்ணி எச்சி காய ஒக்காந்துருக்குறப்போ தெரியுது !

வளர வளர வாலிபம் கழுத்தை நெறிக்கும்... 

நமக்கு நாமே அசிங்கமா தெரிவோம். 

எந்த பொண்ணும் ஏறெடுத்து கூட பாக்காத மூஞ்சியை, நான் தல சீவுரப்போ சொல்லுவா...

ஏண்டி மேகல, என் பேரன் கருப்பா இருந்தாலும் கலையா இருக்காண்டின்னு..

அப்போ ஒரு கோவம் வரும் ! ஆனாலும் உண்மையிலே அப்படித்தான் போலனு நெனச்சு நகர்ந்து போனேன்..

அப்போ தெரியல அவ எவ்ளோ அழகுன்னு..

அம்மா அப்பாவும் வேலைக்கு போயிருப்பாங்க.. அவங்க வர 7 மணி ஆகும், நாம 3 மணிக்கு விளையாட போகலாம்னு bat அஹ் தூக்கிக்கிட்டு மேல தெரு போறதுக்காக; 

இவள தூங்க வைக்க நான் பட்ட பாடு...


இன்னக்கி தூக்கமில்லாம நெனக்கிறப்போ, அன்னைக்கு அவளோட இருந்திருக்கலாமோன்னு நினைக்க வைக்குது.

அதையும் மீறி அப்பா நேரத்தொட வீட்டுக்கு வந்து, நான் விளையாடிட்டு வந்தோனா, எத்தனை மணிக்கு விளையாட போனேன்னு என்னைய அடிக்க ஸ்கெட்ச் போட்டா... அவன் 5 மணிக்கு தான் போனான்னு பொய் சொல்லி காப்பாத்துவா !

அதையும் மீறி என்னைய அடிக்க அவரு கை ஓங்குறப்போலாம், அவ கை என்ன அனைச்சுக்க தவறல !

90ஸ் கிட்ஸ் அப்பாக்கள் கிட்ட அடி வாங்குறதும், அப்பாயி, பாட்டி, கிழவி என்று அழைக்க படும் பாட்டிக்கள் தடுப்பதும் எங்களோடையே முடிஞ்சுது போல..

இப்போ உள்ள பாட்டி எல்லாம், Video call ல கொஞ்சுர அளவுக்கூட, நேர்ல பாக்குறப்போ கொஞ்ச முடியுறது இல்ல; 

கொஞ்ச அந்த பேர பசங்க விருப்பப்படுறதும் இல்ல.

எனக்கு 21 வயசுல வயசானவங்க மேல வந்த அலட்சியம், இப்போ உள்ள பசங்களுக்கு 8 வயசுலயே வருது.

அந்த கதையெல்லாம் சொன்னா; 

என் பொண்ணு அப்படி இல்லை, என் பையன் அப்படி இல்லன்னு நப்பாசைக்கு பல 90ஸ், 80ஸ் கிட்ஸ் நெனச்சு நம்புலனாலும் ...

அதான் நெசம்...

அந்த அலட்சியம் நிரந்தரமா அப்டின்னு கேட்டா, நிரந்தரமற்றதுன்னு தான் சொல்லனும்..

ஆனா, அப்படி ஒரு அலட்சியம் நம்ம கிட்ட இருந்து காணா போறப்போ, நம்ம யாரை அலட்சியமா நெனச்சோமோ அவங்க நம்ம கூட பயணிக்க தவரலாம்.

என்னைய மாதிரி நீங்களும் உங்க புள்ளைங்கலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகலாம்.

அதனால் நீங்களேனும், உங்கள் வீட்டில் உள்ள வயதான தாய், தந்தை, பாட்டி, தாத்தான்னு ஒரு 10 நிமிஷம் மனசு உட்டு பேசுங்க.

நீங்க சின்ன குழந்தையா இருந்து வளந்து ஆளாகி கல்யாணம் ஆகி குடும்பஸ்தன் ஆகி இருக்கலாம்..

ஆனா உங்க பாட்டியோ தாத்தாவோ.. 

அவங்க அதே பாட்டியா தாத்தாவாதான் இருப்பாங்க 🙏

#வருத்தங்களுடன் வினித் மணிமாறன்

8 கருத்துகள்:

  1. அருமையான உணர்வுபூர்ணமான மனதை நெறுடும் பதிவு.உன் மனவருத்தத்தில் நானும் பங்குகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

  2. உணர்வுப்பபூர்வமான வரிகள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. வினித் உன் பாட்டியின் மீது வைத்திருந்த அன்பும் பாசமும் உன் வரிகள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தன.பாட்டி எப்போதும் உன்னோடு இருப்பாள்.கவலையற்க

    பதிலளிநீக்கு